தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

2.9.12

பணியை பாதிக்கும் "விலையில்லா" கல்வி உதவிகள்

மதிப்பெண்களைத் தவிர அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு "விலையில்லாமல்" வழங்குகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்காக, நிதிநிலை அறிக்கையிலும்கூட மூன்றில் ஒரு பங்கு கல்வித் துறைக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலையில்லா கல்வி உதவிகளால் பள்ளிகளில் கற்பித்தல், நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

வழக்கமாக, மே, ஜூன் மாதங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் குறைந்தது 100 முதல் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பள்ளியிலேயே "ஆன்-லைனில்" பதிவு செய்து, அதற்கான சான்றிதழ்களை அளிக்கும் பணியை பள்ளி நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இம்மாணவர்களுக்கு சாதி, வருமான, இருப்பிடச் சான்றிதழ்களை வட்டாட்சியர் அலுவலகங்களிலிருந்து பெற்றுத்தரும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். இதையடுத்து, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களுக்காக விலையில்லாமல் வழங்கப்படும் பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, புத்தகப் பை, சீருடைகள், காலணிகள், பஸ் பயண அட்டை, சைக்கிள்கள், வண்ணப் பென்சில்கள், கணிதக் கருவிப் பெட்டி, புவியியல் வரைபட நூல், இடைநிற்றலைத் தடுப்பதற்கான சிறப்பு ஊக்கத் தொகை, வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி, செஸ் விளையாட்டுக் கருவிகள், மதிய உணவு உள்ளிட்டவற்றைத் தகுதியான ஒவ்வொரு மாணவருக்கும் பெற்றுத்தருவதை தலைமை ஆசிரியர்கள்தான் உறுதி செய்ய வேண்டும். இதற்காக சில மாதங்கள் சாதி வாரியாகப் பட்டியல் தயாரித்து, அரசுத் துறைகளுக்கு அனுப்ப வேண்டும்.

அரசுத் துறைகளிடமிருந்து பகுதிவாரியாகக் கிடைக்கும் நலத் திட்டங்களை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும். சீருடைகள், காலணிகள் போன்றவற்றை மாணவர்களிடம் அளவெடுக்கும் பணியையும் பள்ளி நிர்வாகங்களே மேற்கொள்ள நேரிடுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பீடித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களில் இருந்து உதவித் தொகைகளைப் பெற்றுத் தருதலும் பள்ளி நிர்வாகங்களின் பணியாகும்.

 இந்த உதவித்தொகைகள் அனைத்தும் மாணவர்களுக்குக் காசோலையாக வழங்கப்படுகிறது. இதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கும் பணியையும் கவனிக்க வேண்டும்.

பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள், இரவு மற்றும் பகல் நேரக் காவலாளிகள், அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. பற்றாக்குறை இருக்கும் நிலையில், மேற்கண்ட விலையில்லா திட்டங்களுக்கான தயாரிப்புப் பணிகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களே மேற்கொள்ள நேரிடுகிறது. இதனால், கற்பித்தல் பணியில் தேக்கம் ஏற்படுகிறது.

இப்பணிகளோடு, வழக்கமான பள்ளி நிர்வாகப் பணி, கல்வித் துறையின் ஆய்வுக் கூட்டங்கள், அரசின் அவ்வப்போது அறிவுப்புக்கிணங்க பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள நேரிடுவதால், தலைமை ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

விலையில்லா திட்டங்களின் பணிகளுக்காக வேலைவாய்ப்பு, வட்டாட்சியர், சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்கிறது. சத்துணவுத் திட்டத்துக்கென பள்ளிகளில் அமைப்பாளர்கள் உண்டு; இதேபோல், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம், இளம் செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றுக்குத் தனித் தனியே திட்ட அலுவலர்களைப் பள்ளிக் கல்வித்துறை நியமிக்கிறது.

இவ்வாறாக விலையில்லா பொருள்கள், நலத் திட்ட உதவிகளை மாணவர்களுக்கு வழங்க, தனியே திட்ட அலுவலர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தலைமை ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை குறையும்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்