தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.5.12

முப்பருவ கல்வி முறை - பயிற்சியை ஜூன் முதல் வாரத்தில் நடத்த தஇஆச சார்பில் மீண்டும் கோரிக்கை

மே 29 முதல் 31 வரை நடைபெறவிருக்கின்ற முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சியை ரத்து செய்து ஜூன் முதல் வாரத்தில் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் எட்வின் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

வரும் கல்வியாண்டில், 1 முதல் 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. இதையொட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, பல கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாத இறுதியில் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 402 பேருக்கு, பணியிடை பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது 6,7,8 வகுப்புகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு வரும், 28 முதல் 31ம் தேதி வரை, நான்கு நாட்கள் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சி, அனைத்து மாவட்டங்களிலும், நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயிற்சி மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டு முழுவதும் சமச்சீர் கல்வி தொடர்பான சிக்கல்களால் ஆசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் பள்ளிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த சில நாள்களாகத்தான் ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சிக்கு ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் பெரிதும் மன உழைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளளது.

மே மாத இறுதியில் நடைபெற இருக்கின்ற பயிற்சியால் ஆசிரியர்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டுள்ளது.
  • பெரும்பான்மையான ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்பவர்களாக இருக்கின்றனர்.
  • B.Ed., M.Ed. போன்ற கல்வியியல் பட்டப் படிப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதத்தில் நடைபெறுகிறது.
  • தொலைநிலைக் கல்வி மூலம் B.A., B.Sc., M.A., M.Sc., B.Ed., M.Ed. போன்ற கல்வி பயில்வோருக்கு தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • வெளி மாவட்டங்களில் பணியாற்றுவோர் விடுமுறைக்கு தங்கள் வீடுகளுக்கு சென்றவர்கள் உடனடியாக பணியிடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • திருமணம் போன்ற குடும்ப விழாக்கள் தொடர்பாக திட்டமிட்டவர்களுக்கு அவற்றில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் உடனடியாக திரும்ப இயலாத நிலை
இத்தகு காரணங்களால் மே 29 முதல் 31 வரை நடைபெறுகின்ற பயிற்சியை ரத்து செய்து ஜூன் முதல் வாரத்தில் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்