தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.4.12

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள், "டிஸ்மிஸ்!"

"பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். இதுபோன்ற புகார்களில் சிக்கும் ஆசிரியர்களை இனி, "டிஸ்மிஸ்' செய்வது குறித்து, அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது,'' என, சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறினார்.

தமிழகத்தில், 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில், சிலர் அவ்வப்போது, தங்களது பள்ளியில் படிக்கும் மாணவியரிடமே பாலியல் விளையாட்டுக்களில் ஈடுபடுவதும், உடன்படாத மாணவியரை சித்ரவதை செய்வதும் போன்ற கொடுமைகளில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிடுகிறது. இந்த விவகாரம், கல்வித்துறைக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தி விடுகிறது. இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை, துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து, பின் துறை ரீதியிலான ஒழுங்குமுறை நடவடிக்கைகளையும் எடுக்கின்றனர். எனினும், ஒரு கட்டத்தில் மீண்டும் பணியில் சேர்ந்து விடுகின்றனர். இந்நிலையில், இனிமேல் பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள், "டிஸ்மிஸ்' செய்யப்படுவார்கள் என, சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசும்போது நடந்த விவாதம்:

பாலகிருஷ்ணன்: தமிழகத்தில், பல்வேறு வகையான கல்வி திட்டங்கள் நீக்கப்பட்டு, பொதுப் பாடத்திட்டம் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கென ஒரு இயக்குனர் பணியிடம் தேவையில்லை. ஒரு இயக்குனரே போதும். அவரின் கீழ், அனைத்துப் பள்ளிகளையும் கொண்டு வரலாம்.

கல்வி அமைச்சர் சிவபதி: இத்திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலகிருஷ்ணன்: மதுரையில், ஆசிரியர் ஒருவர், பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள், அவ்வப்போது பல இடங்களில் நடந்துவிடுகின்றன. இதுபோன்ற புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீது, தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர்: ஐந்தரை லட்சம் ஆசிரியர்கள் பணிபுரியும்போது, இதுபோன்று எங்கேயாவது ஒருசில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அதற்காக, அரசு சும்மா விடுவதில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து, மேல் நடவடிக்கை எடுக்கிறது. இனி, இந்த நடவடிக்கையுடன் நிறுத்தாமல், "டெர்மினேட்"(பணி நீக்கம்) செய்யலாமா என, அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

பாலகிருஷ்ணன்: ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த விஷயத்தை அரசு கவனிக்க வேண்டும்.

அமைச்சர்: இப்பிரச்னையை, எனது கவனத்திற்கும் ஆசிரியர்கள் கொண்டுவந்துள்ளனர். விரைவில், இப்பிரச்னை தீர்க்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்