தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

25.3.12

தமிழகத்தின் 2341 பள்ளிகளில் கம்ப்யூட்டர் வழி கல்வி: ஜெ. உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கம்ப்யூட்டர் வழியிலான கல்வித் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 5 ஆண்டுகளில் 2341 பள்ளிகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் தரமான கல்வியைப் பெற முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தற்போதைய உலகம் கணினி உலகம். தற்பொழுது நடைபெறும் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் கணினியை சார்ந்தே அமைந்துள்ளது. எனவே மாணவர்களுக்கு கணினி வழி கல்வி வழங்குவது இன்றியமையாததாக உள்ளது.

இதன் அடிப்படையில், அனைவருக்கும் கணினி வழி கல்வி அளிக்கும் திட்டம் 5 ஆண்டு காலத்தில் 1880 மேல்நிலைப்பள்ளி மற்றும் 461 உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 2341 பள்ளிகளில் பூட் அடிப்படையில் நடைமுறைப்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 31 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் மாவட்டம், வீரசோழனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் முதற்கட்டமாக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் (ஸ்மார்ட் பள்ளி) நிறுவுவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கென முதல் தவணையாக 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் விடுவிக்க ஆணையிட்டுள்ளார். இவையன்றி, திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை, அயிலாப்பேட்டை, சோமரசம்பேட்டை, எட்டரை, இனாம்குளத்தூர் ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் தொடங்குவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார்.

மாணவர்கள் இடைநிற்றல் இன்றி கல்வி பயிலுவதற்கு ஏதுவாக பள்ளிகள் அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே இருக்கும் பொருட்டு, தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்.

நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், நிலையிறக்கம் செய்யப்பட்ட 1040 தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை தலைமை ஆசிரியர் பணியிடமாக நிலை உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 544 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட சோதனைக் கூடங்களை பராமரிக்க 544 ஆய்வக உதவியாளர் பதவியினை ஏற்படுத்தவும் பள்ளிகளின் அலுவலக பணிக்காக 344 இளநிலை உதவியாளர் பதவியினை ஏற்படுத்தவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்