தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.11.10

மேலவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 6 சனிக்கிழமை கடைசி நாள்

மேலவைத் தேர்தலில் பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) கடைசி நாளாகும்.

இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 பட்டதாரிகளும், 16 ஆயிரம் ஆசிரியர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். தீபாவளி பண்டிகை மற்றும் விடுமுறை தினங்கள் வருவதால் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பில் பெரிய அளவுக்கு மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்ட மேலவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளுக்கு தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்ட மேலவை அமைப்பதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் செப்டம்பர் 30-ம் தேதி வழங்கினார். இதைத் தொடர்ந்து, பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் பெயர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கின. சென்னையில் மாநகராட்சி மண்டலங்களிலும், மாவட்டங்களிலும் தாலுகா அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 23 மற்றும் 24, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களும் நடந்தன.

பட்டதாரிகள் விண்ணப்பத்துடன் தங்களது பட்டச் சான்றின் நகலை சான்றொப்பம் பெற்று சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் கொடுக்க வேண்டும். அரசுக் கல்லூரி முதல்வர்கள், வட்ட வளர்ச்சி அதிகாரிகளும் பட்டச் சான்றுகளைச் சரிபார்த்து சான்றொப்பம் இட அதிகாரம் அளிக்கப்பட்டனர்.


அவர்களிடம் சான்றொப்பம் பெற்று இருந்தால், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ்களைச் சரிபார்க்கத் தேவையில்லை என்ற சலுகையை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது.


இந்த நிலையில், மேலவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பெயர்களைச் சேர்ப்பதற்கான கடைசி நாள் வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) ஆகும்.


இதுவரை எத்தனை பேர்? வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை பட்டதாரி தொகுதி வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 பட்டதாரிகளும், 16 ஆயிரம் ஆசிரியர்களும் தங்களது பெயர்களைச் சேர்த்துள்ளனர்.

2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 12 லட்சம் பட்டதாரிகளும், 3.5 லட்சம் ஆசிரியர்களும் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவிலேயே பட்டதாரிகளும், ஆசிரியர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

1 கருத்து:

  1. சனிக்கிழமை கடைசி தேதி என்பதை திங்கள்கிழமை 8ம் தேதி என மாற்றி இருக்கலாம். ஏனெனில் பெரும்பாலான அரசு அதிகாரிகள் சனிக்கிழமை 6ம் தேதி அலுவலகத்துக்கு வரவில்லை. ஆகவே என்னை போல பல பட்டதாரிகளால் சனிக்கிழமை பதிவு செய்ய இயலவில்லை.

    பதிலளிநீக்கு


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்